தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Saturday, March 13, 2010

ஈரோட்டில் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடு நடைப் பயணத்தினருக்கு வரவேற்பு

தமிழ் மீட்பு, தமிழர் மீட்பு நடை பயணத்தில் பங்கேற்றவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் கோடியக்கரையிலிருந்து, குடந்தை வரை 47 நாள்கள் நெடுநடைப்பயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் சுமார் 1,000 கிலோமீட்டர் நடந்து சென்று, விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழைக் கல்வி, ஆட்சி மொழியாக்குதல், தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுத்தல், தாய்த் தமிழ் பள்ளிகளை மேம்படுத்தல், காவிரி, பவானி, பாலாறு, முல்லைப்பெரியாறு, அமராவதி ஆற்று உரிமைகளை மீட்டெடுத்தல், தமிழக எல்லைகளைப் பாதுகாத்தல், கரும்பு, நெல்லுக்கு உரிய விலை பெறுதல், விளை பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயித்தல், விளை நிலங்களைக் காத்தல், மரபு வேளாண்மையை நிலைநிறுத்தல், மது பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்தல், விலையேற்றத்தைத் தடுத்தல், அயல் முதலீட்டிலிருந்து தொழில் வளத்தைப் பாதுகாக்தல், சிறு தொழில்கள் நசிவைத் தடுத்தல், மீனவர்களைப் பாதுகாத்தல், கச்சத்தீவை மீட்டல் ஆகியவற்றை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பங்கேற்றவர்கள் ஈரோட்டுக்கு சனிக்கிழமை வந்தனர். அவர்களுக்கு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தலைமை வகித்தார். மக்கள் சிவில் உரிமைக் கழக நிர்வாகி ச.பாலமுருகன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி ச.அர.மணிபாரதி, பெரியார் திக இராம.இளங்கோவன், புரட்சிகர தொழிலாளர் முன்னணி ரவிக்குமார், சாதி ஒழிப்புப் பொதுவுடமை முன்னணியின் புலி.பாண்டியன், ஏஐசிசிடியு கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி : தினமணி

Monday, March 8, 2010

நெடுநடைப் பயணத்தில் ஒரு பொன்னாள்!

இன்று (28.02.2010) தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 35ஆம் நாள். பட்டுக்கோட்டை வட்டம் அதம்பை எனும் சிற்றூரிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பிப்ரவரி 20, 21இல் மன்னையும் வடுவூரும் தந்த ஊக்கத்துடனும் ஊட்டத்துடனும் 22ஆம் நாள் ஒரத்தநாட்டுக்குப் பயணமானோம். வடுவூரில் காலை உணவு சாப்பிடும் போதே, “மாலையில் ஒரத்தநாடு செல்லும் வரை எதுவும் கிடைக்காமற் போகலாம், நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று தோழர்களை எச்சரித்து வைத்தேன். உண்மையில் அப்படித்தான் ஆகிவிட்டது. ஒரத்த நாட்டில் எங்களை வரவேற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வைகறையும் மற்றத் தோழர்களும் உடனடியாக எங்களுக்கு உணவளித்த பிறகே பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பொதுக்கூட்டத்தில் மதிமுக மாணவரணியைச் சேர்ந்த விடுதலைவேந்தன், ததேபொக தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ. இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றிய பிறகு நான் பேசினேன்.

23.02.2010 பயணத்தின் 30ஆம் நாளில் பப்பாநாடு வழியாகப் பட்டுக்கோட்டை சென்றடைய இரவு 8 மணியாகி விட்டது. ததேபொக தோழர் வெ. இராசேந்திரனும் தமிழ் உணர்வாளர்களும் ஒழுங்கு செய்திருந்த தெருமுனைக் கூட்டத்தில் மொழிச் சிக்கல் குறித்து விரிவாகப் பேசினேன். பட்டுக்கோட்டை அழகிரி 1938இல் முதல் மொழிப் போரின் போது நடத்திய நடைப்பயணத்தை நினைவுகூர்ந்து அவர் பெயர் தங்கிய மு.க.அழகிரி இந்திய அரசில் அமைச்சராக இருந்தும் தாய்மொழியில் பேசவும் கேட்கவும் (செவிமடுக்க) உரிமையின்றித் தவிக்கும் அவல நிலையை ஒப்பிட்டுக் காட்டிப் பேசினேன். மொழியுரிமைக்கும் இனவுரிமைக்கும் அரசுரிமைக்குமான இடைத்தொடர்பை விளக்கினேன். என் எதிரில் பெரிய கூட்டம் இல்லாத போதும் ஏராளமானவர்கள் என் உரையைக் கேட்டுக்கொண்டிருந்ததை அடுத்தடுத்த நாள்களில் பயணப் பாதை நெடுகிலும் தெரிந்து கொண்டோம்.

24.2.2010 நடுப்பகல் வரை பட்டுக்கோட்டையிலேயே கடைத்தெருவில் பரப்புரையும் உண்டியல் வசூலும் நூல் விற்பனையும் செய்தோம், பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்குத் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி,ராமசாமி எமது நெடுநடைப் பயணத்தின் தொடக்கத்திலேயே எங்களோடு நடந்தவர். இடையில் வேறு அவசரப் பணிகளுக்காகச் சென்றவர் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார். அணைக்காட்டில் பகலுணவு உண்ட பின் முத்துப்பேட்டை நோக்கிப் பயணமானோம்.

தம்பிக்கோட்டையைத் தாண்டும் போதே காவல்துறையின் ’வரவேற்பு’ வலுவாக இருந்தது. அதிகாரிகளும் காவலர்களும் எங்களுக்கு முன்னும் பின்னும் செல்ல நாங்கள் முத்துப்பேட்டைக்குள் நுழைந்தோம். அங்கே அண்மைக் காலமாக இந்துத்துவ அமைப்புகளுக்கும் இசுலாமியர்களுக்குமிடையே பூசல் வளர்ந்து பதற்றம் நிலவியதை காவல்துறையினர் விளக்கினர். “உங்களால் ஏதும் புதுச்சிக்கல் வந்துவிடக்கூடாதே?” என்றனர். “எங்களால் சிக்கலுக்குத் தீர்வுதான் வரும்” என்று பதிலளித்தோம். முத்துப்பேட்டையின் பேட்டைப் பகுதியில் என்னை முதலில் வரவேற்று சால்வை அணிவித்தவர் ஓர் இசுலாமியர் – மனித உரிமை ஆர்வலரும் கவிஞருமான பேராசிரியர் பசீர் அகமது. அன்றையப் பயண முடிவில் அவரும் திரு மெய்யப்பத் தேவர் இல்லத்தில் எங்களோடு விருந்துண்டார்.

25.2.2010 நடுப்பகல் வரை முத்துப்பேட்டையிலேயே பரப்புரையும் உண்டியல் வசூலும் நூல் விற்பனையும் செய்தோம். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்திற்குப் போய் கட்சித் தோழர்களையும் தமிழ் உணர்வாளர்கள் பலரையும் சந்தித்தோம். அன்றிரவு அதிராம்பட்டினத்தில் தெருமுனைக் கூட்டம் நடத்தி விட்டுத் தங்கினோம்.

26.2.2010 காலை புறப்பட்டு ராஜாமடம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் வழியாக பேராவூரணி சென்றடைய இரவு 8 மணி ஆகிவிட்டது. தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினேன்.

27.2.2010 காலை பேராவூரணியிலிருந்து புறப்பட்டு ஒட்டங்காட்டில் தோழர் அரங்க குணசேகரன் இல்லம் சென்றோம். அவர் சாலை விபத்தில் காயமுற்று வீட்டில் ஓய்வாக இருந்து வருகிறார். நாங்கள் உதயசூரியபுரத்தை அடைந்தபோது அ.இ.அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்துக்காக ஒலிபெருக்கியமைத்துப் பாடல்களை ஓட விட்டிருந்தனர். எங்கள் பரப்புரைக்காக வேண்டி அவர்கள் சிறிது நேரம் தங்கள் ஒலிபெருக்கியை நிறுத்தி வைத்து உதவினர். இரவு 8 மணிக்கு மேல் அம்பை சென்றடைந்தோம். அங்கே சுருக்கமாக நடைபெற்ற கூட்டத்தில் தோழர் இராமசாமி ஒரு தங்கக் கணையாழியை தமிழ் மீட்பு நிதியத்திற்காக வழங்கி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பயணம் தொடங்குவதற்கு முன்பே தோழர் பஞ்சநாதன் பொன் கொடுத்தார். தோழர் இராமசாமி கொடுத்ததே பயணம் தொடங்கிய பின் முதல் பொன்வரவு. பயணத்தின் 34ஆம் நாளைப் பொன்னாள் என்று சொல்லும் வாய்ப்பை வழங்கிய தோழர் இராமசாமிக்கு நன்றி!

மறு நாள் காலை அம்பையிலிருந்து ஊரணிபுரம் நோக்கிக் கல்லணைக் கால்வாய்க் கரையில் நாங்கள் நடந்த போது தோழர் இராமசாமியும் எங்கள் குழுவில் இருந்தார். இது அவருக்கு நெடுநடைப் பயணத்தில் 12ஆம் நாள்.

அடுத்த பொன்னாள் எப்போது வருமோ?

-- தியாகு

28.02.2010.

Thursday, March 4, 2010

மன்னை – வடுவூர் தந்த ஊக்கமும் ஊட்டமும்

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தில் இன்று (22.02.2010) 29ஆம் நாள். நெடுநடைப் பயணத்தின் நடுப்புள்ளிக்குப் பிறகு 7 நாள் கழிந்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் ஆகிய பேரூர்களையும், இடைப்பட்ட ஏராளமான சிற்றூர்களையும் கடந்துள்ளோம். திருவாரூரில் தமிழர் தன்மானப் பேரவைத் தோழர்கள் எங்களை வரவேற்று விருந்தோம்பினர். நகரத்தின் முக்கிய மையங்கள் பலவற்றில் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தினோம். உண்டியல் நிதியிலும் புத்தக விற்பனையிலும் திருவாரூர் ஏமாற்றவில்லை. நாம் தமிழர் இயக்கத் தோழர்களும் உதவிகள் செய்தார்கள்.
(மன்னார்குடி தெருமுனைக் கூட்டத்தி தோழர் தியாகு)
மாங்குடியிலும் மாவூரிலும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். மணலியில் ம.தி.மு.க. தோழர்கள் இரவு தங்கவும் உண்ணவும் ஒழுங்கு செய்தனர். திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் வரவேற்பளித்தனர். தமிழ் அன்பர்களும், தனிப்பட்ட நண்பர்களும் தமிழ்த் தேசம் வாசகர்களும். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் ஆங்காங்கே சந்தித்து ஆதரவளித்தனர். கோட்டூரில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, .தே.பொ.. தோழர்கள் வரவேற்றனர்.


(மன்னார்குடி பெரியார் சிலை அருகே நடந்தப் பெருங்கூட்டத்தில் தோழர் தியாகு)

20.02.2010 சனி காலை மதுரையிலிருந்தும் திருப்பூரிலிருந்தும் பெண்ணாடத்திலிருந்தும் புதிய தோழர்கள் வந்து சேர, பயணக் குழுவினரின் தொகை முப்பதைத் தாண்டியது. அன்று மாலை மன்னார்குடியில் நுழைந்த போதே வரவேற்பு தடபுடலாக இருந்தது. சிவகுமார் என்பவர் முதல் நன்கொடையாக இரண்டாயிரம் கொடுத்துத் தொடங்கி வைத்தார். மூன்று இடங்களில் சுருக்கமான தெருமுனைக் கூட்டங்கள் நடத்திய பிறகு, பெரியார் சிலை அருகே ஒரு மணி நேரம் பேசினேன். பெருங்கூட்டம் திரண்டது. ஏராளமான அன்பர்கள் பயணக் குழுவினர் அனைவருக்கும் சால்வை போர்த்திச் சிறப்புச் செய்தனர். நன்கொடையும் திரண்டது. மன்னைத் தமிழ் அன்பர்கள் சார்பில் ரூ. 25,000/- வழங்கினர். திருப்பூர் மாவட்டத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் ரூ. 50,000/- வழங்கினர். அடுத்த கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மன்னை தந்த கொடை மொத்தம் எண்பதாயிரத்தைத் தாண்டியது. ஒவ்வோர் ஊரிலும் இதே போல் கிடைத்தால் தமிழ் மீட்பு நிதியத்துக்கான இலக்கைத் தொட்டு விட முடியும் என்ற நம்பிக்கையை மன்னை எமக்களித்தது.


(மன்னைத் தமிழ் அன்பர்கள் )

(திருப்பூர் மாவட்டத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)

21.02.2010 நடுப்பகல் எடமேலையூரில் பசுமை சூழ்ந்த வயற்கொட்டகையில் விருந்துண்டு ஓய்வெடுத்த பின் இரவு 7 மணியளவில் வடுவூரில் நுழைந்தோம். ஊராட்சித் தலைவரும் மற்றவர்களும் வரவேற்றனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் முதன்மைச் சாலையில் ஊர்வலமாகச் சென்று கடைத்தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முனைவர் இளமுருகன் வரவேற்றுப் பேசிய பின், வடுவூர் மக்கள் சார்பில் ரூ.21,000/- வழங்கினர். எதிர்பாராத வரவாகத் திருப்பூரிலிருந்து வந்த திருப்பதி ரூ.2,000/- கொடுத்தார். திருப்பூரில் திருமணம் முடிந்து வரவேற்புக்காக நீடாமங்கலம். செல்லும் வழியில் கூட்டம் நடப்பதைப் பார்த்து, சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி மற்றவர்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு வந்தார், தந்தார், சென்றார். ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் பேசி முடித்த பின், இரவு உணவுக்காக 3 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும், வண்டியில் போகலாம் என்றனர். அதை எற்க மறுத்து நாங்கள் நடந்தே சென்றோம். தோழர் முருகேசன் குடும்பத்தினரின் இனிய விருந்தோம்பல் இரு நாள் நடைப்பயணத்தில் மன்னையும் வடுவூரும் தந்த ஊக்கத்துக்கும் ஊட்டத்துக்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது. இந்த ஊக்கமும் ஊட்டமும் தொடர்ந்தால் நன்று.
– தியாகு
22.02.2010

Monday, March 1, 2010

ஒன்றுபடுவோம் – மக்களுடன்

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்திற்கு நடுவில் இதை எழுதுகிறேன். இந்தப் பயணத்தில் நானும் தோழர்களும் தெரிந்து கொண்ட உண்மைகளில் ஒன்று: நமக்கும் வெகுமக்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது!

பதவி அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பது உண்மைதான். திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அங்கங்கே சில பெரும்புள்ளிகளைச் சார்ந்து இயங்குகின்றன. இந்தப் புள்ளிகளைச் சுற்றி எடுபிடி வட்டங்கள் உள்ளன. கீழே இருப்பவர்களுக்கு ஆண்டைகளாகவும், மேலே இருப்பவர்களுக்கு அடிமைகளாகவும் செயல்படுகிறவர்கள்தாம் வட்டாரத் தலைவர்கள், உள்ளூர்த் தலைவர்கள். இந்தக் கட்சிகளில் தன்னலங் கருதாத் தலைவர்களையோ தொண்டர்களையோ காண்பது அரிதிலும் அரிது. அப்படி யாராவது இருந்தால் அவர்கள் செயல்முனைப்பற்று ஓய்ந்து போனவர்களாய் இருப்பார்கள். இந்தக் கட்சிகள் கொள்கை நிலையில் போண்டிகளாகி விட்டன.

காவிரி உரிமை பறிபோனதாலும், உழைக்கும் மக்களின் சமூகத் தகுநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாலும் எழுந்துள்ள புதிய நிலைமைகளுக்கு ஈடு கொடுப்பதில் இடது சாரிக் கட்சிகளுக்குக் கடும் இடர்ப்பாடுகள் உள்ளன.

ஆனால் பதவி அரசியல் கட்சிகள் விட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் போராட்ட அரசியல் இயக்கங்கள் வந்துவிட வில்லை. சில இடங்களில் சாதியமைப்புகள் தலைதூக்கியுள்ளன.

புரட்சிகர அரசியல் பேசுவோரும், தமிழ்த் தேசியர்களும் நகர எல்லைகளைத் தாண்டவே இல்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இவர்கள் தமக்குள் ஒன்றுபடுவதும் போராடுவதும் இவை குறித்துப் பேசுவதுமாகக் காலம் கழித்துக் கொண்டிருக்கும் போதே சிற்றூர்ப் பகுதிகள் எல்லா வகையிலும் பொட்டல் வெளியாய்க் கிடக்கின்றன. இவற்றைப் பூக்கள் நிரப்பத் தவறினால் புழுதிக் குப்பைகள் நிரப்பிவிடும் ஆபத்துண்டு.

ஆகவே அடிப்படை மாற்றத்தை விரும்புவோர் யாராயினும் மக்களை நாடிச் செல்வதும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதும், அவர்களை அணித்திரட்டிப் போராடுவதும் அவசரத் தேவைகள். மக்களுக்குள்ள சிக்கல்களுக்கு மட்டுமல்ல, இயக்கங்களுக்குள்ள சிக்கல்களுக்கும் கூட இதுவே சரியான தீர்வு.

- தோழர் தியாகு

-சமூக நீதித் தமிழ்த் தேசம்